Friday, December 3, 2010

கண் திறக்கட்டும் கண்ணம்மா!


தினசரி நாளிதழ்களைப் புரட்டப்புரட்ட பற்றி எரிகின்றன. பச்சிளங்குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த செய்தியில் ஆரம்பித்து, நாற்பதைக்கடந்த பேராசிரியை கற்பழிக்கப்பட்ட விவகாரம் தொட்டு ஒவ்வொன்றிலும் நெருப்பை அள்ளி கொட்டுகிறது பெண்கள் மீதான வன்முறை! மூன்று நொடிகளுக்கு ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறாள். 69 பேரில் ஒருவர் மட்டுமே தங்களுக்கு ஏற்பட்ட கொடுமையை வெளியில் சொல்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு மகனாக, ஒரு பெண்ணுக்கு கணவனாக இருக்கும் எனக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. ஒரு பெண்ணுக்கு அப்பானாகும் போது அந்த இதயத்துடிப்பு நின்று விடக்கூடாது என்பதிற்காக இதைப் பகிர்கிறேன்.

“பொண்ணுங்களுக்குத் தான் மச்சான் காலம்! என்று கல்லூரிப்பையன்கள் முதல் பெரியவர்கள் பலரே கூட ஒருமுகமான பெண்களின் வளர்ச்சியை மட்டுந்தான் பார்க்கிறார்கள்! 

பெப்சி கம்பெனியின் முதன்மை மேலாளர் இந்திரா நூயியையும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் சோனியா காந்தியையும் தெரிந்தவர்களுக்கு பீச்சில் பிச்சையெடுக்கும் சிறுமிகளையோ, தமிழக கிராமப்புறப்பள்ளிகளில் கழிவறைக் கழுவும் அருந்ததியினர் இனப் பெண்பிள்ளைகளையோ, காதல் குழப்பத்தில் உயிரை  தொலைத்த, ஆசிட் வீச்சில் முகத்தை தொலைத்த, இளம்பெண்களையோ, தன்னுடைய தவறு எதுவுமே இல்லாத பொழுதும் கணவனால் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகும் அப்பாவிக் குடும்பப் பெண்களையோ, கும்பல் கும்பலாய் தோல் காட்டி, உடல் விற்றுப்பிழைக்கும் கல்கத்தா சோனா கச்-மும்பை சிவப்பு விளக்கு-பெங்களூரு மசாஜ் கிளப் பெண்களையோ, நம் கல்லூரி மச்சான்களுக்கும் கலாச்சார குகையில் இருந்து வெளி வராத பெரியவர்களுக்கும் தெரிவதே இல்லை. 

இங்குள்ள அத்தனைப் பெண்களுக்கும், கல்வியும், பொருளாதார மேம்பாடும் தான் பிரச்சினையா என்றால், இல்லை. 

இந்தியாவின் தலைநகரான புது தில்லியிலிருந்து, குக்கிராமம் வரை எல்லாவித வன்முறைக்கும் ஆளாகும் பெண்களில் படித்துக் கொண்டிருப்பவர்கள், படித்தவர்கள், வேலை பார்ப்பவர்கள், பழுத்த அறிஞர்கள் என்று அனைவருமே அடக்கம்.
கிராமக்குடிசையில் வன்முறையை அனுபவித்தப் பெண் இப்போது பள்ளிக்கும் வேலைக்கும் போகும் வழியிலும், பள்ளியிலும் வேலை பார்க்கும் இடத்திலும் அதே வன்முறையை நாசூக்காகவும் அப்பட்டமாகவும் அனுபவித்து வருகிறாள்.
இந்த வன்முறையைச்செய்யும் ஆண்களும் கல்வியறிவு இல்லாதவர்கள் கிடையாது. சொந்தத்துறையில் வேலை செய்யும் பணியாளரை வன்முறை செய்யும் மேலதிகாரி இருக்கிறார். பி.பி.ஓ.வில் வேலை பார்க்கும் பட்டதாரி இருக்கிறார். காவல்துறை அதிகாரி இருக்கிறார்.

ஆன்மீகச் சித்தாந்தத்தில் திளைத்த, காவித்துணி போர்த்திய பன்றிகள் இருக்கிறார்கள். (பன்றிவிரும்பிகள் மன்னிக்கவும்). நாக்கூர்மையை வைத்து வணிகம் செய்யும் அரசியல் பெருச்சாளிகள் இருக்கின்றனர். 

மொத்தத்தில் பெண் கொடுமைகளுக்கு கல்வியறிவின்மை காரணம் இல்லை. பெண்களின் நம்பிக்கையின்மையும் ஆண்களின் அதிகாரப்போக்கும் மட்டுமே பெண்களுக்கெதிரான கொடுமைகளுக்கு அடிக்கோலிடுகின்றன. இரு பாலாருக்குமே கிடைத்திருக்க வேண்டிய பாலினக்கல்வி கிடைக்கவில்லை. 

படித்த பெண்களில் பலர், பாவம், அழகு என்ற அழுக்கு போர்வைக்குள் தான் முடங்கிக் கிடக்கின்றனர். உண்மையான அழகு அறிவு, திறன், குணம், எண்ணம் ஆகியவற்றில் தான் இருக்கிறது என்பதை அவர்களுக்கு தெரியாமலேயே வளர்க்கிறது கலாச்சாரமும், இன்றைய சினிமாவும், பத்திரிக்கைகளும்!

பெண் விடுதலைக்கு போராடிய தலைவர்களின் உழைப்பு இன்று, ஜூவல்லரி வியாபாரிகளுக்கும், முகப்பூச்சு நிறுவனங்களுக்கும் ஃபேஷன் ஷோ  செய்து பிழைப்பு நடத்தும் கோட்டு சூட்டு போட்ட திருட்டு கும்பலுக்கும் தான் உதவி இருக்கிறது. இவர்கள் தங்கள் பொருட்களை பயன்படுத்துவதே நம்பிக்கையின் அடையாளம் என்று தம்பட்டம் அடிக்கிறார்கள்.

குண்டு மல்லிகா! குட்டை கோமளா! என்று கும்மாளம் போடுகிறது விவல் சோப்பு விளம்பரம்! திரிஷா போன்ற மேனியைப் பெறுவதே அழகு என்றும் தன்னம்பிக்கை என்றும் கயிறு திரிக்கிறது! 

குள்ளமான, உடல் பருமனான, கருப்பான பெண்கள் எல்லாம் இவைகளை பார்த்து ஏங்கித் திளைக்கிறார்கள். தாழ்வு மனப்பான்மையால் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கிறார்கள். 

இந்த விளம்பரங்களை சீரியல்களுக்கு இடையே பார்த்து பார்த்து வாங்கி ஏமாறுகிறது ஒரு கூட்டம். வாங்க முடியாத கூட்டம் பொறாமையில் மூழ்குகிறது.
இத்தனை வருடங்களாக பெண்களை துரு பிடித்த இரும்புக் கூண்டிலிருந்து தங்கக் கூண்டிற்கு மாற்றி இருக்கிறோமே தவிர அவர்களை விடுதலை செய்த பாடில்லை. அவர்களின் சிறகுகள் வளர உதவவே இல்லை. 

சுய அறிதல் பற்றியும், உணர்ச்சிகளை கையாளுதல் பற்றியும், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வித்தையை பற்றியும், பிரச்சினைக்குரியவர்களை திணறடிக்கும் உறுதியையும் பள்ளிக்கல்வியோ, பல்கலைக்கழகங்களோ தரவில்லை.
இவற்றை தருவதே பெண் விடுதலைக்கு போராடிய தலைவர்களின் உழைப்புக்கு செய்யும் மரியாதை ஆகும். 

பாரதி கண்ட கண்ணம்மா, குடும்பமோ சமூகமோ விரிக்கும் எந்த வலையிலும் மாட்டிக்கொள்ளாதவள். சிரித்தபடி அடிமைச்சங்கிலி இடும் சில்லறை வியாபாரங்களில் சிக்கிக்கொள்ளாதவள். அப்படிப்பட்ட கண்ணம்மாவை ஒவ்வொரு குழந்தையிம் இருந்தும் தட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. பள்ளிகள் அளிக்கும் கல்வியை மீறி இவர்களுக்கு வாழ்க்கையை வாழ வாழ்வியல் திறன்கள்  தர வேண்டியிருக்கிறது. 

சுதந்திரம் பெற்ற 63 ஆண்டுகளில் அரசும், அரசு சாரா நல்ல உள்ளங்களும் செய்திருக்க வேண்டிய இந்த பணிகளை நலந்தாவே அறக்கட்டளை செய்யவிருக்கிறது. உணர்ச்சிகளைக் கையாள, சுய விழிப்போடு நடை போட, தன்னம்பிக்கை பரிமளிக்கச்செய்ய, பாரதி கண்ட கண்ணம்மாவை வளர்த்தெடுக்க திட்டமிட்டு இருக்கிறது.

பாரதியின் பிறந்த நாளாகிய டிசம்பர் 11-ஆம் நாள் முதல் கண்ணம்மா என்ற பெயரில் இத்திட்டம் இயங்கவிருக்கிறது. 

வீதியில் உலவும், வறுமையில் வாடும், பெற்றோர் இன்றி தவிக்கும், இன்ன பல பாதிப்புகளில் தவிக்கும் பெண் குழந்தைகளின் வாழ்வு மேம்பாட்டுக்கு தரமான கல்வி, வாழ்வியல் திறன் பயிற்சிகள் ஆகியவற்றை கலை மற்றும் ஊடகம் மூலம் அளிக்கவிருக்கிறது. 

எதிர்கொள்ளவிருக்கும் சவால் எத்தனை வலியது என்பதை உணர்ந்து உலகெங்குமுள்ள ஏராளமானோர் நிதியுதவி வழங்க உள்ளனர். இவர்களை ஒருங்கிணைத்து நிதியை பெற்றுத்தர 25 வீரர்-வீரங்கனையர் களத்தில் உள்ளனர். 

உங்கள் வீட்டுப் பெண் எங்கோ பிறந்து திரிவதாக எண்ணிக்கொள்ளுங்கள்! அவள் வாழ்க்கை சிறக்க, உங்கள் பிள்ளை போல் சிரிக்க, நிதி உதவி செய்யுங்கள்! 

நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு நாணயத்திற்கும், மெல்ல மெல்ல....... கண் திறக்கட்டும் பாரதியின் கண்ணம்மா!

வரவேற்பறையில் காத்திருக்கிறோம். www.nalandaway.org/kannama

Tuesday, November 9, 2010

பெரியாரும் ஆயுத பூஜையும்


சமீபத்திய செய்தி- மேட்டூர் காவல் நிலையத்தில் ஆயுத பூஜை கொண்டாட முற்பட்ட காவலர்களை பெரியார் திராவிட கழகத்தினர் தாக்கினர். இரண்டு நிலைகளிலிருந்து இச்செய்தியை பார்க்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். ஒன்று, காவல் நிலயத்தில் ஆயுத பூஜையை கொண்டாடலாமா என்பது. மற்றொன்று, காவலர்களை ஒரு கழகத்தினர் தாக்கியிருக்கலாமா என்பது.

காவல் நிலையத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்படலாமா?

ஆயுத பூஜை என்பது வழிவழியாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வந்து கொண்டிருக்கும் சடங்கு. அதிலும், இந்திய அரசு துறைகளில் பல இடங்களில், குறிப்பாக பி.ஜே.பி. ஆண்டு கொண்டிருக்கும் பல இடங்களில் விமரிசையாகவே, கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் சடங்கு.

தனி நபர்களின் மத நம்பிக்கையை ஆணித்ரமாக ஆமோதிக்கும் இந்திய அரசின் போக்கு, அரசுத்துறைகளில் மத சடங்குகள் நடைபெறக்கூடாது என்னும் நிலையில் வலுவிழந்தே நிற்கிறது. புதிய சட்டமன்றத்திற்கு அடிக்கல் நாட்டுவதாயினும் சரி, பாலங்களை திறப்பதாயினும் சரி, பிராமணர்களின் சடங்குகளோடே ஆரம்பிக்கப்படுகின்றன!
இது மதசார்பற்ற நாடு. அரசியல் சட்டம் இவற்றைத் தடுக்கிறது என்கிற மேம்போக்கான வாதத்திற்கு அடியிலிருக்கும் உண்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மைனாரிட்டிகளாக வாழ்வோரின் மனநிலை மெஜாரிட்டிகளுக்கு புரிந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்றாலும் புரிந்து கொள்ள முயற்சி செய்தே ஆக வேண்டும்.
நூறு மனிதர்களும் இரண்டு விலங்குகளும் ஊருக்குள் இருக்கும் போது அந்த விலங்குகளுக்கான பயம் விலங்குகளுக்கே தெரியும்! புரியும்! நூறு விலங்குகளும் இரண்டு மனிதர்களும் காட்டுக்குள் இருக்கும் போது அந்த மனிதர்களுக்கான பயம் மனிதர்களால் மட்டுமே உணர முடியும்!

இந்த ஊருக்குள் மனிதர்களாக வாழும் நாம் அனைவரும் நம்பிக்கையை வைத்தே வேறுபடுகிறோம். மனிதர்களாக இருப்பதினால் மட்டுமே மைனாரிட்டிகளின் பய உணர்வை, தாழ்வு மனப்பான்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு பெரிய விருந்தில் ஸ்பூனில் சாப்பிடும் மனிதர்களுக்கு இடையே கையில் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படக்கூடிய மனநிலை தான்.

ராணி விக்டோரியா ஒரு பெரிய விருந்து கொடுத்தாராம்.  ஆப்ரிக்கரும் பிரிட்டிஷாரும் கலந்து கொண்டனர். உணவு உண்ட அனைவருக்கும் கடைசியில் கைகழுவ ஃபிங்கர் பௌல் என்று சொல்லக்கூடிய தண்ணீர் குடுவை வழங்கப்பட்டது. ஒரு ஆப்பிரிக்க விருந்தாளி அதுவும் ஒரு வகை ரசம் என்றெண்ணி அதைப்பருக ஆரம்பித்து விட்டார். மேசையில் அமர்ந்திருந்த சிலருக்கு அதிர்ச்சி. சிலருக்கு சிரிப்பு. அதை கவனித்த ராணி விக்டோரியாவும் அந்த ஆப்ரிக்க நண்பருக்கு அசூயையாக இருந்துவிடக்கூடாது என்பதிற்காகவே அவரும் அந்த தண்ணீர் குடுவையிலுருந்த தண்ணீரை பருக ஆரம்பிக்க, ராணியே செய்துவிட்டார் என்று எல்லோரும் அதைப்பருக ஆரம்பித்து விட்டனர்.

சக மனிதர்களை எந்த நிலையிலும் புண்படுத்தி விடக்கூடாது என்பது பண்பாடு. நாகரீகம். சொல்லப்போனால், பண்டுகாலம் தொட்டு தமிழக, இந்திய மரபில் உள்ள பண்பாடு இதுவேயன்றி, நடுவே வந்த ஆயுத பூஜைகளோ இதர சடங்கு சம்பிரதாயங்களோ அல்ல.
மைனாரிட்டியாக வாழ்வோரின் மனநிலையை, பேச்சு, செயல், உடல்மொழி, பார்வை, எண்ணம், என்று எவ்விததிலும் புண்படுத்திவிடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தையும், பண்பாட்டையும் மனதில் வைத்தே நமது அரசியலமைப்பு சட்டத்தை வரிவாரியாக வார்த்தை வார்த்தையாக வடித்துள்ளனர் அம்பேத்கர் தலைமையில் அமைத்த குழுவினர்.
இந்துவல்லாத மற்ற நம்பிக்கை உடையவர்களுக்கு, தனக்கும் இங்குள்ள அரசு அலுவலங்களில் நியாயம் கிடைக்கும், பயன்கள் இருக்கும் என்கிற நம்பிக்கையை இந்த சடங்குகள் குலைக்கும். ஜாங்கிட் போன்ற பெரிய காவல்துறை அதிகாரிகள் நவராத்திரி விழாவிற்கு தலைமை தாங்கும் பொழுது அந்த சுற்றுபுறத்தில் உள்ள இந்துக்கள்ளலாதவர்களுக்கு கிலி வரத்தான் செய்யும். என்றோ ஏற்படப் போகும் பூகம்பத்திற்கு அடிமனதில் ஏற்படும் சிறிய விரிசல் தான் அது.

அதற்காக சொந்த நம்பிக்கைகளை விட்டுவிடச்சொல்லி எந்த சட்டமும் சொல்லவில்லை. அவை இல்லங்களோடு நின்றுகொண்டு அலுவலகங்கள்  வரை வந்து விட வேண்டாம் என்பதே நிலை.

பெரியார் திராவிட கழகத்தினர், காவல் நிலையத்தை தாக்கியது சரியா?
வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை அழைத்துக்கொண்டு கோவிலுக்குள் சென்ற பெரியாரே யாரையும் தாக்கியதாக சரித்திரம் இல்லை. இன்றுள்ள பெரியோர்கள் எந்த சமூக கொள்கையையும் திணிப்பதாலோ வன்முறையாலோ வெற்றி பெறாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கருத்து நுழைவுகள், அமைதியாகவோ ஆர்ப்பாட்டமாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ நிகழ்த்தக்கூடிய பாதிப்புகள் புண்படுத்துவதற்காகவே செய்யப்பட்டவை என்று பதியுமே தவிர அதிலுள்ள ஆழ்ந்த உண்மைகள் உணரப்படாமலே போய்விடும்.

மனமாற்றம் ஓரிரவில் நிகழக்கூடிய விஷயம் அல்ல. சரியான பழக்கமோ தவறான பழக்கமோ, மாற்றிக்கொள்ள அவகாசம் தேவைப்படுகிறது. கலகக்காரர்கள் பொறுமையுடன் கலக்க வேண்டும். அந்த பொறுமையை கோழைத்தனமாக நினைத்துக்கொள்ளக்கூடிய பெரியார் என்ற வெறும் பெயர் பிரியர்களும், மேம்போக்காக, கண்மூடித்தனமாக ஆன்மீகத்தையும் சடங்குகளையும் எதிர்ப்பவர்களும் தான் இன்று இருக்கிறார்கள். எந்த நிலையிலும் பழிக்கு பழி வாங்குவதையோ உடல் மற்றும் மனரீதியாக புண்படுத்துவதையோ பெரியார் பிரகடனம் செய்யவில்லை. பெரியார் தனக்குத்தோன்றிய கருத்துக்களை, வலுவான ஆதாரங்களோடும்,  ஆழமான சிந்தனையோடும், அசாத்திய துணிச்சலோடும் சொன்னாரே ஒழிய, அரசியல் காரணங்களுக்கு நாத்திகப்போர்வையை போர்த்திக்கொள்ளவில்லை. மக்கள் கொண்டிருந்த மூட நம்பிக்கைகளைத்தாக்கினாரே ஒழிய மக்களைத் தாக்கவில்லை.

பெரியாரின் வழியாகத் தங்களைச்சொல்லி கொள்பவர்களுக்கு, மக்களை பகுத்தறிவுப்பாதையில் கைக்கோர்த்து இட்டுச்செல்லும் பொறுப்பு இன்று இருக்கிறது. அந்த பொறுப்பின் முதல் படி பொறுமை என்பதை கழகத்தினர் உணராமல் பகுத்தறிவு பகலவன் உதிக்க மாட்டான்.